ஒரு காலத்தில் விளம்பரங்கள் என்றால் அது நடிகைகள்தான் என்று இருந்தது. அது இப்போது அடியோடு மாறிவிட்டது. தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் நடிகர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. ரஜனி, கமல், தவிர மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருமே விளம்பரத்துக்கு வந்து விட்டார்கள். பெண்கள்தான் வாங்கும் ஆசை கொண்டவர்கள் என்றாலும் அதை தீர்மானிப்பவர்கள் ஆண்கள் என்பதால் இந்த மாற்றம் என்று சொல்கிறார்கள்.
அரசியலுக்கு வந்து மேடை தோறும் முழுங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரபு ஒரு நகைக்கடைக்காக இப்போது புரட்சி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த விளம்பரம் பெற்ற வெற்றியால் இப்போது அமிதாப் பச்சனோடு இணைந்து நடித்து விட்டார். "இன்னொருத்தர் தயாரிக்கிற பொருளை நான் விற்பனை செய்வதா?" என்று விளம்பர வாய்ப்பு வந்தபோதெல்லாம் தட்டிக் கழித்த இளையராஜா இப்போது ராகத்தோடு ஒரு நகை கடை நகைகளின் பெருமையை பாடுகிறார். விளம்பர படங்கள் பக்கம் வராமல் இருந்த சரத்குமார் வெண்மை புரட்சி என்று வேட்டி விளம்பரத்தில் மோகன்லாலுடன் புஜம் காட்டுகிறார். பாக்யராஜும், பூர்ணிமாவும் கணவன் மனைவியாகவே விளம்பரத்தில் நடிக்கிறார்கள். மனைவி சினேகா நடித்த கடை விளம்பரத்தில் இபபோது பிரசன்னா நடிக்கிறார். (மனைவி சிபாரிசாக இருக்குமோ). இருவரும் சேர்ந்து ஆடிமாத பிரிவையே செல்போன் விளம்பரமாக்கி காசு பார்த்தார்கள்.
மாதவன் விளம்பரத்திலிருந்துதான் சினிமாவுக்கு வந்தார் அவர் பற்றி சொல்லத் தேவையே இல்லை. விளம்பரத்தை விட்டு ஒதுங்கி இருந்த விஜய் ஒரு நகைக் கடையை நல்ல கடை என்று சிபாரிசு செய்தார். இப்போது அம்மாவுடன் சேர்ந்து நகையுடன் செண்டிமெண்டையும் தருகிறார். விஜய் தங்கம் வாங்கச் சொன்னால் விக்ரம் அதை அடகு வைக்கச் சொல்கிறார்.
இன்றைக்கு விளம்பர உலகின் மோஸ்ட் வாண்டட் பேமிலி சிவகுமார் பேமிலிதான். சூர்யா, கார்த்தி, ஜோதிகா என்ற அந்த குடும்பமே விளம்பர சேவை செய்து வருகிறது. ஒரு காப்பி நிறுவனம் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுக்கு இரவில் சூரியனை உதிக்க வைத்தது. இருவரும் வீட்டில் மணக்க மணக்க காப்பி குடித்து எல்லோரையும் குடிக்கச் சொன்னார்கள். ஒரு செல்போன் நிறுனத்தின் அத்தனை புதிய திட்டங்களையும் சூர்யா சிரித்தபடி பெரிய அறிவித்துக் கொண்டிருக்கிறார். பிரபல கூல்டிரிங்சை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கச் சொல்கிறார். பற்களை சுத்தமாக வைத்திருந்தால் பஸ்சில் காதலி கிடைப்பாள் என்கிறார். அண்ணன் காப்பி குடிக்கச் சொன்னால் தம்பி கார்த்தி டீ குடிக்கச் சொல்கிறார். பிரகாஷ்ராஜ் விளம்பரத்துக்கு, விளம்பரம் பிரசங்கம் செய்கிறார். சந்தானம் சோப்பு விளம்பரத்தில் கைகழுவுகிறார். அப்பாஸ் ஆர்பிட் ஊற்றி கக்கூஸ் கழுவுகிறார். பார்த்திபன் கொஞ்ச நாளாக ஈமு கோழிக் கறி சாப்பிடச் சொன்னார்.
இப்படி எல்லோருமே மக்களை அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பெரிய நடிகர்கள்தான் விளம்பர படத்தில் நடிக்க வேண்டுமா சிறிய நடிகர்கள் நடிக்க கூடாது என்ற கேட்டு அவர்களும் உசிலம்பட்டி உஷா சில்க் முதல் சுடர்மணி ஜட்டி விளம்பரம் வரை நடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
டி.வி.நடிகர்கள், தொகுப்பாளர்கள் சும்மா இருந்து விட முடியுமா. விழுப்புரத்தை தாண்டி நின்று கொண்டு "சென்னைக்கு மிக மிக அருகில், விமான நிலையத்திலிருந்து 200 கிலோ மீட்டர் அருகில் அருமையான பிளாட். ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த காலத்தில் விளம்பரம் இல்லாமல் எந்த வியாபாரமும் செய்ய முடியாது என்பதும் உண்மைதான், ஆனால் அதில் குறைந்த பட்சம் நியாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது நடிகர்களின் கடமை. அண்மையில் உச்சநீதி மன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் "ஒரு பொருளின் தரம் குறித்து பிரச்சினை வந்தாலோ, அல்லது அந்த நிறுவனம் மக்களை ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றினாலோ அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக விளம்பரப் படத்தில் நடிப்பவர்களுக்கும் அதில் பங்கு உண்டு, அவர்களையும் வழக்கில் சேர்க்கலாம்" என்று கூறியிருக்கிறது. இதை நடிகர்கள் கவனதில் கொண்டால் அவர்களுக்கும் நல்லது வாடிக்கையாளர்களுக்கும் நல்லது.
ஆக இப்படி எல்லா நடிகர்களும் சகட்டு மேனிக்கு விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றுக்கும் என்ன காரணம் நல்ல பொருளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவா? இல்லை. தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ள. சூரியாவிற்கு கோடிக் கணக்கில் தொடங்கி பிளாட் போண்டா மணிக்கு சில ஆயிரங்கள் வரை ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இந்த விளம்பரத்தில் விளையாடுகிறது. இந்தப் பணம் எங்கே இருந்து வருகிறது. நம்முடைய பாக்கெட்டிலிருந்துதான். இந்த விளம்பரங்களை பார்த்து கடைக்கு செல்லும்போது நீங்கள் வாங்கும் பொருளின் விலையில் இருக்கிறது இந்தப் பணம்.
நன்றி தின மலர்....
1 கருத்து:
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Ayurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India
கருத்துரையிடுக